தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதிமுறைகளை திருத்தி தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
TNPSC தேர்வுகளுக்காக ஒன்றாம் வகுப்பு முதல் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை விதி பொருந்தும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கான விதிமுறைகளில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1-ஆம் வகுப்பு முதல் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை முழுவதுமாக தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1-ஆம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை தரப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
- பிற மாநிலங்களில் தமிழ் மொழியினைப் பயிற்று மொழியாக பயின்று, பின்னர் தமிழ்நாட்டில் தங்களது கல்வியை தமிழ் வழியில் தொடர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
- அதே சமயம், இதர மொழிகளைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படாது என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
- கல்வி மற்றும் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் என்பதை நியமன அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
PSTM GOVT GO LINK
Tags
Daily Updates