
தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்படும்.
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும். அவ்வாறு பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப்பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay -ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும்.
இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
வயது வரம்பு :-
1. 21 முதல் 40 வயது வரை ( பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்)
2.18 முதல் 40 வயது வரை (பழங்குடியினர்)
3.20 முதல் 40 வயது வரை ( விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்)
குறைந்தபட்ச கல்வி தகுதி 10 வகுப்பு தோல்வி /தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைபட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும் (ஊராட்சி-குக்கிராமம் வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை).
விதவைகள் கணவரால் கைவிடப்பட்டோர் பெண்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் / நகராட்சி அலுவலகத்தில் வேலை நாட்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தருமபுரி மாவட்ட இணையதள dharmapuri.nic.in என்ற முகவரியிலும் விண்ணப்பங்கள பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.04.2025 மாலை 5.45 மணிவரை பெறப்படும் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன்பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்களின் நகல்கள் :-
1. பள்ளி மாற்று சான்றிதழ்
2. SSLC மதிப்பெண் சான்றிதழ்
3. குடும்ப அட்டை
4. இருப்பிட சான்று
5. ஆதார் அட்டை
6. சாதிச்சான்று
7. விதவை கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ்
8. மாற்றுதிறனாளிகள் இருப்பின் அதற்கான சான்றிதழ்
அஞ்சல் துறையின் மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும் போது ஏற்படும் கால தாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.